சந்திக்கப்போகும் புனித மாதம் (welcome holy month - Ramadan)....


வகை வகையான உணவுகளின் போட்டோக்களை காண்பித்து புனித ரமழானை அறிமுகம் செய்ய வேண்டாம்.


எண்ணிக்கை தெரியாமலே மாதங்கள் கடந்து செல்கின்றன பலரின் வாழ்வில்.

காலங்களை கணக்கிடும் பலரின் கலண்டர்களில் இடையிடையே வந்துபோகும், ஓய்வைக்கொடுக்கும் ஒரு மாதம் தான் ரமழான்.

வருடத்தில் ஒரு மாதம் ரமழானின் பெயர்கொண்டு உதிக்கின்றது. அது காலத்தை படைத்த அல்லாஹ்வினால் சூட்டப்பட்ட பெயர்தான்.

ஒரு நாளைக்கு 12 மணித்தியாளங்கள் தொடராக பணிபுரியும் ஒரு உத்தியோகத்தர் ஒரு மணித்தியாளத்தை தனது பணிக்கான ஓய்வாக எடுத்துக்கொள்வார்.

12 மாதங்கள் கஸ்டப்பட்டு உழைக்கும் குடும்பத்தின் தலைவர் ஒரு மாதத்தை தனது ஓய்வின், விடுதலையின் தினங்களாக எடுத்துக்கொள்ள முயற்சிப்பது இயல்புதான்.

ஆனால் நோன்பின் மாதத்தை அப்படி கவனிக்க தேவை இல்லை.

மூன்று மாத அருவடை என்ற கணக்கெடுப்பில் வயலில் இறங்கும் உழவனுக்கு மூன்றாவது மாதம் கிடைக்கும் வந்தோக்ஷம் எண்ணில் அடங்கா, வார்த்தையில் அடங்கா………… காரணம் அது தான் அருவடையின் மாதம், அதில் தான் வருமானத்தின் தினம் நிச்சயிக்கப்படுகிறது.

இதற்கு ஒப்பானதும் கூட இந்த ரமழான் மாதம் எமக்கு.

அதிகரித்த நன்மைகளின், வருமானத்தின் ஒரு குறித்த மாதம் இது.

அன்றாட வாழ்வின் நாம் செய்யும் சம்பாதிக்கும் நன்மைகளுக்கு பல்மடங்கு புள்ளியிடும் மாதம் தான் ரமழான் அந்த அல்லாஹ்விடத்தில்.




நமது உள்ளத்தின் உறுதியையும் தக்வாவையும் பரீட்சித்துப் பார்க்கும் மாதமேயாகும்.

நாம் பின்பற்றும், எம்மை வழிநடத்தும் அல் குர்ஆன் வழங்கப்பட்ட மாதமும் கூட.
இந்த 29 அல்லது 30 நாட்களைக்கொண்ட ரமழான் மாதத்தை எப்படி அதிபயன் கூடிய மாதமாக மாற்றிக்கொள்வது என்பது தொடர்பாக மாற்றங்கள் தேவை பகுதி உங்களை சிந்திக்க அழைக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூரினார்கள்,

’யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) 
புகாரி: 1903, 6057

நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையில் பார்க்கமுடியாத பல புதிய நடைமுறைகள் நம் வாழ்வில் இடம்பெறுகின்றன.

ரமழானை வரவேற்று அதெற்கென நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்து தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை வீசி, வீடுகளில் மூடிவைக்கப்பட்ட குர்ஆன்களை தூசி தட்டி ஓத எத்தனிப்பது போன்ற செயல்களை குறிப்பாக கூறலாம்.

சாதாரண நாட்களில் கடமையான தொழுகைகளை நிறைவேற்ற தவறும் நாங்கள் ரமழானில் மட்டும் கடமையற்ற இரவுத் தொழுகைகளுக்கு அதிமுக்கியத்தும் செலுத்துவதன் தேவை என்ன?

எமது இந்த அவசியமற்ற நடத்தைகளை உணர்ந்துகொண்டு நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் ஆயுளில் நீண்ட நன்மைகளை சம்பாதிக்க முடியும் இன்க்ஷா அல்லாஹ்.

இது அல் குர்ஆனின் மாதம் என்பதை உணர்ந்துகொண்டு அதனை சுயமாக கற்று விளங்கக்கூடிய நிலைக்கு எங்களை தரமுயர்த்த வேண்டும்.

ஒரு மாத கால அவகாசம் முழுமையாக இந்த கற்றல் செயற்பாடுகளுக்கு போதுமானதாகும்.

அன்றாடத் தொழுகைகளில் ஓதும் குர்ஆனிய அத்தியாயங்களை அதன் மொழிபெயர்ப்புக்களுடன் மனனமிட்டுக்கொள்ளலாம்.

ஸகாத், சதகாவை அதிகம் கொடுக்கும் மாதமாக இதனை பயன்படுத்த வேண்டும்.

நோன்பு மாதத்திற்கு முன் எப்படி இருந்தோம், அதற்கு பின் எப்படி இருக்கின்றோம் என்பதை எம்முடைய அன்றாட நடத்தைகளுடன் ஒப்பிட்டுப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஒப்பீட்டு முறை எமது வாழ்வின் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும்.

இந்த மாதத்தில் எடுத்துக்கொள்ளும் பயிற்சி மீதியுள்ள அனைத்து வாழ்க்கைக் காலப்பகுதிக்கும் தேவை என்பதை கவனத்தில் கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.



மேலதிகமாக உங்கள் கருத்துக்களை இங்கு பின்னூட்டல் (Comments) மூலம் பதிந்து பிறரை பயனடையச் செய்யுங்கள்.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: