வளைகுடாவிலிருந்து ஒரு குரல்.....


(இது சிறுகதையல்ல... சோகக்கதை)
பகுதி 3
ன்று இரவு எனக்கு தூக்கமே இல்லை. நான் ஒரு லட்சாதிபதி ஆகிவிட்டதை போன்ற உணர்வு. பக்கத்து தெருவில் வீடுவீடாக சைக்கிள் திருடிக்கொண்டிருந்த நாகூரப்பாவை சொந்தக்காரங்க புடிச்சு துபாய்க்கு அனுப்பி வச்சாங்க. இப்போ அவன் மூணுமாடி வீடு கட்டி இருக்கான், கார் வச்சிருக்கான். நானும் போனால் என்னுடைய பிரச்சனைகள் தீர்ந்துவிடும் தானே!... கற்பனை குதிரைகள் கடிவாளமின்றி தாறுமாறாக சென்றது. கொடுக்கும் பணத்தை மூன்றே மாதத்தில் சம்பாதித்து விடலாம். ஆனால் பணத்திற்கு எங்கே போவது? என்ற எண்ணம் ஏற்பட கற்பனை கலைந்தது.

என் அம்மாவிடம் சொன்னதும் சந்தோசப்பட்டாள். மறுநாள் காலையில் என் அம்மாவை காணவில்லை. இரவில் தான் வீட்டுக்கு வந்தாள். விசாரித்த போது, நம்ம சொந்தகாரங்கிட்ட போய் கடன் கேட்டேன்பா, யாரும் தரலை. திருப்பி தருவோம்கிற நம்பிக்கை அவங்களுக்கு இல்லை. இந்தா இதை வச்சிக்கன்னு 200, 500ன்னு இனாமா தந்தாங்க. எண்ணிப்பார்த்தால் மொத்தம் 4000 ரூபாய் தான் தேறிச்சு என்றாள் அம்மா. அம்மாவை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது.

மறுநாள் எங்கேயோ சென்று விட்டு வேகவேகமாக வந்த எனது தாயார், நம்ம சொந்தக்காரங்களால நமக்கு உதவி பண்ண விருப்பமில்லை. ஆனால் எதிர் தெரு சேட்டு உதவி பண்றேன்னு சொல்றான்பா என்றாள். ஆனால் ஒரு உத்தரவாதத்திற்காக நீங்க இருக்கிற வீட்டு பத்திரத்தை மட்டும் கொடுங்க, ஒரு லட்ச ரூபாய் தர்றேன்னு அந்த சேட்டு சொல்றான் என ஆர்வத்தோடு சொன்ன என் தாய், நாம தான் மூணு நாலு மாசத்துல திருப்பிடலாமேப்பா என்றாள் என்னை உற்று நோக்கிய படி.

தலையாட்டினேன். ஏஜண்டிடம் 10 போட்டோவை மட்டுமே கொடுத்தேன். ஜந்தாவது நாளில் ஏதோ ஒரு முகவரியில் வேறொரு பெயரில் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லாத பிறந்த தேதியில் எனது போட்டோ ஒட்டி ஒரு பாஸ்போர்ட் என் கையில் கிடைத்தது. வீட்டு பத்திரம் சேட்டு கைக்கு போனது, விசா காப்பி எனது கைக்கு வந்தது.

நான் திரும்பி வரும் போது நீங்க எல்லோரும் வேன் புடிச்சு ஏர்ப்போர்ட்டுக்கு வரணும் என்று அம்மாவிடம் சொல்லி விட்டு எனக்கு விசா தந்த எனது வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு புறப்பட்டேன்.. லட்சியக்கனவுகளுடன் லட்சங்களை சம்பாதிக்க.

மும்பையில் ஒரு லாட்ஜில் வந்து சேர்ந்தேன். அங்கே என்னைப்போலவே பலர். ஏஜெண்டுகளின் மினுமினுக்கும் வாக்குகளை நம்பி லட்ச லட்சமாக அள்ளலாம் என எண்ணி தங்கை திருமணத்திற்கு வைத்திருந்த நகையை விற்று அல்லது அடமானம் வைத்துவிட்டு வந்தவர்கள் சிலர், தாயின் மருத்துவ செலவுக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்ததை ஏஜண்டிடம் கொடுத்தவர்கள் சிலர், குடியிருக்கும் ஒரே வீட்டையும் விற்றவர்கள் சிலர் இவற்றில் எதுவுமே இல்லாமல் வட்டிக்கு கடன் வாங்கி வந்தவர்கள் சிலர் என பலதரப்பட்டவர்கள் இருந்தனர்.

மறுநாள் டிராவல்ஸ் ஆபீஸூக்கு சென்றேன். விசா காப்பியை வாங்கி பார்த்த ஒருவர், நீங்க ரொம்ப லேட்டு. கம்பெனிக்கு அவசரமாக ஆள் தேவைப்படுதுன்னு அரபி சொன்னார். அதனால் வேறு ஆள் எடுத்து அனுப்பிவிட்டோம் என்றார். எனக்கு தூக்கிவாரி போட்டது. ஆனால், பரவாயில்லை. இன்னும் இரண்டு நாளில் இதை விட நல்ல விசா, புதிய விசா வருது. அதை தருகிறோம் என்றார் அவர். சற்று நிம்மதி ஏற்பட்டது. 
                                                 இரண்டு நாள் தானே என நான் காத்திருந்தேன்.                                                    ஆனால் இரண்டு மாதங்களாகியும் எதுவும் நடக்கவில்லை.                  விசா வரவில்லை. எதிர் வீட்டுக்கு போண் பண்ணி அம்மாவை கூப்பிட்டு விசயத்தை சொன்ன போது "சேட்டு வட்டிப் பணம் கேக்கிறான்பா" என்று அழுதாள் அம்மா. 
நானும் சேர்ந்து அழுதேன். 
                                                            வேறென்ன செய்ய?...

மும்பையில் சாப்பிட வழியில்லாமல் ஒரு ஹோட்டலில் கிளீனராக சேர்ந்தேன். மூன்று வேளை சாப்பாடு கிடைத்தது. ஒரு வழியாக ஒன்பது மாதங்களுக்கு பிறகு விசாவும் கிடைத்தது. ஹவுஸ் டிரைவர் விஸா. என்னது இது? நான் டிரைவர் இல்லையே? கம்பெனியில் நல்ல வேலை என்றல்லவா பாய் சொன்னார் என்றேன். விஸா அப்படித்தான் இருக்கும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. இங்கே பார். இவர் எட்டாம் வகுப்பு தான் படிச்சிருக்கிறார், கிளீனிங் வேலைக்கு போகிறார். ஆனால் விஸா என்ன தெரியுமா? இன்ஜினியர் விஸா. இந்த விஸாவில் ஆள் போகும் போது அதுக்கு தகுந்த மாதிரி நாங்க டாக்குமென்ட்ஸ் தயார் பண்ணிக்குவோம் என்று கூறி அவருடைய பெயரில் தயாரிக்கப்பட்ட இன்ஜினியரிங் படிப்பிற்கான முத்திரையுடன் கூடிய சான்றிதழ்களை காண்பித்தார். எனக்கு அவர் சொன்னதில் பாதி தான் புரிந்தது.

மெடிக்கல் டெஸ்டுக்கு சென்றேன். இரத்தம், ஈஸிஜி, உடற் பரிசோதனை என பலதரப்பட்ட பரிசோதனைகள் நடந்தன. ஐ டெஸ்ட் எடுத்துட்டு வா என்றார்கள். அங்கே சென்றேன். ஒரு புத்தகத்தை காண்பித்து இதை படி என்றார் ஒருவர். பான்பராக்கை வாயில் மென்று துப்பிக் கொண்டே இருந்தார். அவர் டாக்டராம். படித்தேன். கண்ணில் ஒரு லென்ஸை வைத்து விட்டு இப்போது படி என்றார்;. என்னால் படிக்க முடியவில்லை. உனக்கு கண் சரியாக தெரியவில்லை என்றார். நான் தான் சரியாக சொன்னேனே என்றேன். எதிர்த்தா பேசுகிறாய்? உனக்கு அன்ஃபிட் (Un Fit) போட்டு விடுகிறேன் என்றார். நான் அவரிடம் கெஞ்சினேன். சரி. 100 ரூபாய் கொடு. ஒரு கண்ணாடி எழுதி தருகிறேன் என்றார். நான் தான் ஏற்கனவே ஐ டெஸ்ட்டுக்காக 100 ரூபாய் கொடுத்து விட்டேனே என்றேன். டிரைவர் விஸாவுக்கு ஐ டெஸ்ட் முக்கியம், ரோடு சரியாக தெரியவேண்டுமல்லவா? அதனால் கண்ணாடி வேண்டுமென்றார் அவர். நான் இந்த கண்ணாடியை வாங்கி போட வேண்டுமா என்றேன். தேவையில்லை, அந்த சீட்டை மட்டும் வைத்துக் கொள் என்றார். 100 ரூபாய் கொடுத்த உடன் ஃபிட் என சீல் வைத்து கையெழுத்து போட்டார். வெளிநாட்டுக்கு செல்ல இருப்பவர்களிடம் முடியுமானவரை கறந்து விடுவோம் என ஒவ்வொருவரும் துடிப்பது எனக்கு புரிந்தது. மெடிக்கல் முடிந்து ஆபீஸூக்கு சென்றேன். பின்னர் ஒரு வாரத்தில் உனக்கு எல்லாம் தயாராகிவிட்டது. புறப்படு என்றனர். நான் எங்கே செல்வேன். கம்பெனி முகவரி, போண் நம்பர் தாருங்கள் என்றேன். ஒரு போண் நம்பரை தந்துவிட்டு, நீ அங்கே சென்று இறங்கியதும் உன்னை ஒருவர் அழைத்து செல்வார் என்றனர்.

விமானநிலையம் சென்றேன். உள்ளே செல்லும் போது ஒரு போலீஸ்காரர், கையில் இண்டியன் மணி இருந்தால் இங்கே கொடுத்து விடுங்கள். அங்கே அதை கொண்டு செல்லக் கூடாது என்றார். எனது கையில் இருந்த 330 ரூபாயை அவரிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்றேன். (எந்த நாட்டு பணத்தையும் கையில் வைத்திருக்கலாம் நான் ஏமாற்றப்பட்டேன் என்பது பின்னர் புரிந்தது.)

நான் பறந்தேன். வளைகுடாவிற்கு சென்றிறங்கியதும் ஒரு இனம் புரியாத சந்தோசம். இனி என் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடுமென்ற ஆவல். விமானத்திலிருந்து இறங்கியவர்களுடன் நானும் சென்று எமிக்ரேசன் கவுண்டரில் நின்றேன்.

அங்குள்ள அதிகாரி கதீம் ஹீனா, ஜிதீத் ஹீனா (பழைய ஆள் இங்கே, புதிய ஆள் அங்கே) என்று இரண்டு திசைகளில் கையை நீட்டினார். எனக்கு எதுவும் புரியவில்லை. நான் ஒரு கியூவில் நின்று கொண்டேன். ஒவ்வொருவராக வரிசையில் நின்றவர்களை பார்த்துக் கொண்டே வந்த ஒரு அதிகாரி என்னைப்பார்த்து அந்த ஜிதீத் என்றார். நான் மொழி தெரியாமல் விழித்தேன். என் பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்தவர். என்னை ஓங்கி அறைந்தார். எனக்கு எதுவுமே புரியவில்லை. ஜிதீத் வல்ல கதீம்? கம் மர்ரா கலாம்? (புதியவரா? பழையவரா? எத்தனை முறை கேட்கின்றேன்?)என்றபடியே அடுத்த வரிசையில் நிற்கும் படி சொன்னார்.

வளைகுடாவில் கால்பதித்ததும் முதல் அறை விழுந்த அதிர்ச்சியில் நான் நிற்கும் போது இன்னொரு அதிகாரி வந்து அடுத்த வரிசையில் நிற்க சொன்னார். சிறிது நேரத்தில் என்னை அடித்த அதிகாரி வர, என்னிடம் மிகுந்த கோபத்துடன் என் கையை பிடித்து தரதரவென இழுத்து இன்னொரு வரிசையில் கொண்டு விட்டார். எனக்கு மொழி தெரியாததால் எதுவும் சொல்ல இயலவில்லை. ஆனால் ஏற்கனவே இங்கு இருந்தவர்களும் அதை வேடிக்கை பார்த்தார்களே தவிர எவரும் எனக்கு உதவி செய்யவில்லை.

ஒருவழியாக எமிக்ரேசன் முடிந்தது. லக்கேஜை எடுத்துவிட்டு வெளியே போகும் நேரத்தில் வாசலுக்கு முன்னால் நின்ற ஒரு அதிகாரி, பையை திறக்க சொன்னார். திறந்தேன். பர்ரா, பர்ரா என்றார். போடுடா, போடுடா என்று எனக்கு கேட்டது. வெளியே எடுத்து போட்டேன். துணிகளுக்கிடையில் இருந்த என் குடும்ப போட்டோ தரையில் விழுந்தது. ஓடிச் சென்று கையில் எடுத்து அணைத்துக் கொண்டேன். என்ன அது எனக் கேட்டு என் கையில் இருந்து அதை பறித்தார். போட்டோவை பார்த்ததும் அலட்சியமாக தூக்கி எறிந்தார். இந்த நாட்டில் இருப்பவர்கள் மனிதத்தன்மையற்றவர்கள் தானோ என எனக்கு தோன்றியது.

வெளியே வந்தேன். ஒரு அரபி ஓடிவந்தார். பாஸ்போர்ட் எங்கே, பாஸ்போர்ட் எங்கே எனக் கேட்டார். நான் பயந்த படியே அதை கொடுக்கவில்லை. எனக்கு அடுத்து வந்தவரின் பாஸ்போர்ட்டை பறித்து தால், தால் எனக்கூறி அவரை வண்டியில் ஏற்றினார். என்னை ஒருவர் வந்து அழைத்து செல்வதாக கூறி இருந்ததால் அங்கேயே நின்றேன். யாரும் வரவில்லை. காலையில் வந்திறங்கிய எனக்கு பசி ஏற்பட்டது, ஆனால் கையில் பணமில்லை. மதியம் ஆகிவிட்டது. ஆனால் என்னை அழைக்க யாரும் வரவில்லை. ஒரு இந்திக்காரரிடம் போண் நம்பரை கொடுத்து போண் பண்ண சொன்னேன். அவரோ அந்த நம்பரில் போணை யாரும் எடுக்கவில்லை என்றார். மாலை நெருங்கியது. என்னை அழைப்பவர் வரவில்லை. பசியால் களைப்புற்றேன்.

(நான் என்ன ஆனேன் என்பதை அடுத்த மடலில் வரைகின்றேன்)

அன்பு சகோதரர்களே!
இந்த இழிநிலை நம் சந்ததியினருக்கும் வேண்டுமா?

சிந்திப்போம்!

இந்திய நாட்டிலே நமக்கு வேலை வேண்டும். அதற்கு இடஒதுக்கீடு ஒன்றே தீர்வு!

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும்.

எங்களுக்கு ஏற்பட்ட இந்த இழிநிலை எங்கள் குழந்தைகளுக்கு வேண்டாம்!

வளைகுடாவாசிகளே! ஜூலை 4 இட ஒதுக்கீடு பேரணிக்காக புறப்படுவோம் சென்னையை நோக்கி! தீவுத்திடலை நோக்கி!
                                                                -- ஒரு வளைகுடாவாசி-- 
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

Anonymous said...

கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் அதுக்கும் ஜுலை 4 மாநாட்டுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியலை. அதை சம்பந்தப்படுத்தாமல் பொதுவான கட்டுரையாக இருந்தால் நல்லது. ஆனாலும் யதார்த்தமா இருக்கு. - சூரியன்

Unknown said...

Hi Brother,

Keep on going...

thanks

Unknown said...

Brother,

why still not add some more social problems.

thanks

Anonymous said...

Dear Brother,

we are waiting for the 4th one.

please post it

thanks
Ravi