அல் குர்ஆன் பேசுகிறது.......04


தொடர் நான்கு:
அல் குர்ஆனின் அத்தியாயங்களை வாசிக்கின்ற பொழுது அது ஒரு தொடராக இல்லாதது சாதாரண மக்களுக்கு ஒரு புதிராகவே இருந்துவருகிறது, அதற்கான விடையை அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் வெளியிட்ட  திருக்குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து கிடைக்கிறது, அத்துடன் அதன் இலக்கிய நடைகள் பற்றியும் தெளிவாகச் சொல்லுகிறார்:

அல் குர்ஆனின் அத்தியாயங்கள் தொடராக இல்லாதது பற்றி அறிஞருடைய கருத்தை கீழ் காண்போம்:
திருக்குர்ஆன், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் செய்திகள் வடிவமைக்கப்பட்ட நூல் அல்ல. மாறாக 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கமுள்ள அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்?

அதில் முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.
சில அறிவுரைகளை ஏழெட்டு தடவை கூட கூறியிருப்பார்.
சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை தான் கூறியிருப்பார்.
செய்தியின் முக்கியத்துவத்தின் காரணமாக இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைப்பிடிக்காத போதும் மறுபடியும் கூறியிருப்பார்.
இதே போன்ற காரணங்களால் தான் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன.

தந்தை மகனுக்குக் கூறிய பத்து வருட அறிவுரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டதாக இருக்காது.

முதல் நாளில் மகன் கோபமாக இருப்பதைக் கண்டு பொறுமையைப் பற்றிப் பேசுவார்.
அடுத்த நாளில் பரீட்சை என்றால் படிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவார்.
மறுநாள் மகன் சரியாக சாப்பிடவில்லையானால் உணவு உட்கொள்வது பற்றிப் போதனை செய்வார்.

அதற்கும் மறு நாள் தாயை மகன் எதிர்த்துப் பேசுவதைக் காணும் போது அது பற்றி அறிவுரை கூறுவார்.
இந்த அறிவுரைகள் எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப் படுத்திக் கூறப்பட்டிருக்காது. முதலில் இந்தத் தலைப்பிலான விஷயங்களைக் கூறிவிட்டு, அடுத்து வேறு தலைப்பை எடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் திட்டமிட்டு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவதில்லை. மகனுக்குத் தேவைப்படும் செய்திகளைத் தேவையான அளவுக்குக் கூற வேண்டும் என்பது மட்டுமே அவரது திட்டமாக இருக்கும்.

இது போலவே திருக் குர்ஆனும் பல அறிவுரைகளைக் கூறியுள்ளது.

எனவே திருக்குர்ஆனில் சில செய்திகள் திரும்பத் திரும்ப கூறப்படுவதையும், குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் அதன் செய்திகள் அமையாமல் இருப்பதையும் காணலாம். முன்னர் கூறப்பட்டது பிறகு மாற்றப்பட்டதையும் காணலாம்.
பொதுவாக எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கும் இடையே பல வேறுபாடுகளைக் காணலாம்.

எந்த ஒரு தலைவரின் மேடைப் பேச்சையாவது கவனியுங்கள்! "இவருடைய ஆட்சி மோசமான ஆட்சி. ஊழல் மலிந்து விட்டது. உன்னை ஆட்சியை விட்டு அகற்றுவதே எனது முதல் வேலை'' எனப் பேசுவார். இவருடைய ஆட்சி என்று படர்க்கையாகப் பேசியவர் திடீரென "உன்னை'' என்று முன்னிலைக்கு மாறுவார்.
"இவர்' என்பதும் "உன்னை' என்பதும் ஒருவரைத் தான் குறிக்கிறது என்றாலும் பேச்சுக்களில் இத்தகைய முறை உலக மொழிகள் அனைத்திலும் காணப்படுகிறது.
இது மேடைப் பேச்சுக்களில் மட்டும் இல்லை; வீட்டில் ஒருவர் தன் குடும்பத்தில் பேசும் பேச்சுக்களிலும் இந்தப் போக்கைக் காணலாம்.
"உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது'' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வருபவர் திடீரென்று "இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால் தான் நிம்மதி'' எனக் கூறுவார். 

முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதை சர்வ சாதாரணமாகப் பேச்சு வழக்கில் காணலாம்.
ஆனால் எழுத்தில் இவ்வாறு யாரும் எழுத மாட்டோம். திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே தான் திருக்குர்ஆனிலும் இது போன்ற போக்கை அதிக அளவில் காண முடிகின்றது.
"நீங்கள்' என்று முன்னிலையாகப் பேசிக் கொண்டே வந்து "அவர்கள்' என்று படர்க்கைக்கு மாறும்.

திருக்குர்ஆன் பேச்சாக அருளப்பட்டு, எழுத்து வடிவமாக்கப்பட்டது என்பதே இதற்குக் காரம். 
அதே போல் தந்தை மகனுக்குக் கூறும் அறிவுரையில் சூழ்நிலைக்கு ஏற்ப சில அறிவுரைகளை மாற்றிக் கூறுவதுண்டு.
நான்கு வயதுச் சிறுவனாக இருக்கும் போது "வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது'' என்று கூறிய தந்தை பதினைந்து வயதுப் பையன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தால் "வெளியே போய் மற்றவர்களைப் போல விளையாடினால் என்ன'' என்று கூறுவார். முன்பு கூறியதற்கு இது மாற்றமானது என்றாலும் இரண்டுமே இரண்டு நிலைகளில் கூறப்பட்டவை.
இது போலவே குர்ஆனும் பல்வேறு கால கட்டங்களில் கூறப்பட்ட அறிவுரை என்பதால் இரு வேறு சூழ்நிலைகளில் கூறப்பட்ட இரு வேறு அறிவுரைகள் முரண் போல தோற்றமளிக்கலாம். இது போன்ற இடங்களில் நாம் அதற்குரிய குறிப்புகளில் விளக்கம் அளித்துள்ளோம்.
குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும் போது மிகச் சில இடங்களில் மட்டுமே "நான்' எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் "நாம்' என்றே கூறுகிறான்.
தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல் வேறு மொழிகளில் உள்ளது போல் அரபு மொழியிலும் உள்ளது.
"இது என் வீடு' என்று கூறும் இடத்தில் "இது நம்ம வீடு' என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என இதைப் புரிந்து கொள்ள மாட்டோம்.
சொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது "நம்ம பையன்' என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இது போல் தான் "நாம்', "நம்மை', "நம்மிடம்' என்பன போன்ற சொற்கள் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 

 தொடரும்.........



 எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: